முதல்வரின் திறமை தேடல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, ஜாதி உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்கள் இருந்தால் வரும் மே 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு முதல்வரின் திறமை தேடல் தேர்வு கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 1,50,265 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.
இத்தேர்வின் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளமான www.dge.tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்களின் பெயர் எழுத்துப்பிழை, பிறந்த தேதி, ஜாதி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அதற்கான ஆதார ஆவணங்களுடன் தேர்வு கூட நுழைவுச்சீட்டையும் இணைத்து dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மே 16-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 16-க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்களுக்கும், 500 மாணவிகளுக்கும் பிளஸ் 2 வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















